01 March, 2010

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

No comments: